மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

போட்டிக்கான கட்டுரை

முரண்பாடுகளில் முந்திய ஹைக்கூ




"நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்"

              எனும் பாரதியின் முழக்கத்தோடு அவன் விட்டுச்சென்ற அக்கினிக்குஞ்சுகளின் வரிசையில் நானும் இதோ பெண்ணியம் பேச புறப்பட்டுவிட்டேன் இக்கட்டுரையின் வாயிலாக..

             சங்க காலம் முதல்  இன்று வரை பெண் என்பவள் பல சங்கடங்களையும் இன்னல்களையும் அனுபவித்துக்கொண்டுதான் வருகிறாள். குழந்தைத் திருமணம், சிசுக்கொலை, கைம்பெண், உடன்கட்டை ஏறுதல், பொட்டுகட்டி விடுதல் (திருமணம் செய்துகொள்ளாமல் இறைவனுக்காக வாழ வேண்டும் எனும் பெயரில் பொதுமகளிராய் நடத்தப்பட்ட கேடுகெட்ட வழக்கம்) அப்ப்பபாா சொல்லி முடியாது இந்த பெண்கள் பட்ட பாடுடுடு...

               நான் புதுக்கோட்டையைச்  சேர்ந்தவள் என்பதில் சிறிது கர்வம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. காரணம் பெண்கள் வீட்டுப்படியைத் தாண்டுவதையே பெருங்குற்றமாய்க் கருதிய காலத்தில் வீட்டுப்படியைத் தாண்டி கல்வி எனும் சிறகைக் கொண்டு சிகரம் நோக்கி துணிவுடன் பறந்த முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைச் சேர்த்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த ஊரில் நானும் பிறந்துள்ளேன் என்பதால்!!!!!!
                                                     


                        பெண் என்பவள் இவ்வுலகின் அன்பின் சாட்சி, உயிர்களின் ஆட்சி , அழகின் காட்சி என்றெல்லாம் காலம் காலம் பலரும் பலவிதமாக வார்த்தைகளில் வர்ணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால் உண்மையில் பெண்மையின் நிலைமை என்ன? என்றோ ஒருநாள் எதற்காகவோ அடக்கப்பட்ட பெண்ணினம் இன்றும் அதே நிலையில் சற்று சுதந்திரமான சூழலில் அடக்கப்பட்டுதான் இருக்கிறது..

                            பெண் விடுதலைக்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடிய பலருள்  பாரதியாரும் பெரியாரும் குறிப்பிடத்தக்கவர்கள்..இவர்களின் வாழ்விலும் பெண் நிலையான இடத்தைப் பிடித்தாள் என்பதற்கு இதோ  .. ராமசாமி என்றால் யாருக்கும் உடனே தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை ஆனால் ”பெரியார்” என்று சொன்னால் பிஞ்சுக் குழந்தையும் சொல்லும் யாரென்று.. அப்படி பெற்றவர்கள் வைத்த பெயர் கூட மறந்து போகும் அளவிற்கு ”பெரியார் ” எனும் பெயர் நின்று நிலைத்துவிட்டது. அந்த நிலைத்த பெயரை அவருக்கு சூட்டியது யாரென்று எத்தனை பேர் 
அறிவர்??? பெரியார் என்று அழைத்தவர்  டாக்டர் தருமாம்பாள் என்ற பெண்..
                                             
         

                       முன்பெல்லாம் வீட்டிற்குள் அடங்கியிருந்தவள் இன்று சமுதாயம் என்னும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறாள். பெண் என்பவள் ஆணுக்கு அடிபணிந்து தான் வாழ வேண்டும் என்று இந்த  சமுதாயம் எதிர்பார்க்கிறது . இதை   எவ்விதத்தில் ஏற்றுக் கொள்ள இயலும். ஆணாயினும் 
பெண்ணாயினும்  உணர்வுகள் ஒன்றென்பதை ஏன் இந்த சமூகம் உணர மறுக்கிறது . பெண்ணை  விட ஆண் வலிமையாக இருப்பதற்கு காரணம் பெண்ணை அவன்  பாதுகாப்பதற்கே அன்றி அவளை அடக்கி  ஆளுவதர்கில்லை.

              ஒரு சமயம் பாரதியார் ஒரு பெண்ணைச் சந்திக்க சென்றார். அப்போது அவர் உங்கள் மனைவி  வரவில்லையா? என்று கேட்டதற்கு சடங்கு சார்ந்த விசயங்கள் அன்றி அவர் வெளியே வருவதில்லை மேலும் அவருக்கு அரசியல் அறிவு அவ்வளவாக இல்லை என்றார் பாரதியார். அதற்கு  அந்த பெண் உங்கள் வீட்டில் உள்ள பெண்ணன் விடுதலையைப் பற்றியே சிந்திக்காத நீங்கள் எவ்வாறு இந்நாட்டின் விடுதலையைப் பற்றி முழுமையாக சிந்திக்க முடியும் என்று கேட்டார். அதன் பின்பே பெண் விடுதலை வரிகளால் பெண் இனத்திற்கு பெரும் உத்வேகம் வழங்கினார் பாரதியார். அவருக்கு  பெண் சிந்தனைகளை விதைத்தவர் யாரென்று தெரியுமா? அவர் தான் சகோதரி நிவேதிதா தேவி!!!! பெண்....

                                                 
                               


                   இவர்கள் மட்டுமா! இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் தன்னை
 எதிர் நோக்கிய முரண்களை முட்டறுத்தவர்கள்.. மூவாலுர் இராமாமிர்தம்
அம்மையார், அசலாம்பிகை அம்மையார், வேலு நாச்சியார்,
அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள், ருக்மணிதேவி அருண்டேல், இராணி
மங்கம்மாள், ராணி லெட்சுமி பாய்,கல்பனா சாவ்லா, வசந்தகுமாரி( முதல்
பெண் ஓட்டுநர்)  என்று இன்னும் எத்தனை எத்தனை பெண்கள்


               பெண் சுதந்திரம், பெண் விடுதலை, பெண் உரிமை என்று பக்கம்
பக்கமாக வசனம் பேசுபவர்கள் என்று இந்த சமூகத்தில் அதிகம். ஆனால்
பேசுபவர்கள் எல்லாம் வாழ்வில் அதுபோல் இருப்பார்களா என்றால்
பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை . ' ஊருக்கு தான் உபதேசம்
உனக்கும் எனக்கும் இல்லை' என்பதே பெண்ணியத்தை பற்றிய பொதுவான
கருத்து . அதனை உடைத்தெறிந்த முரண்பாடுகளில் முந்திய ஹைக்கூக்கள்
இவர்கள்..


             ஒரு பெண் என்பவள் வீடாக இருந்தாலும் அலுவலகமாக இருந்தாலும் தனக்கான சுய உணர்வுக்கோ சுய மரியாதைக்கோ இடம் கொடுக்க கூடாது. அப்படி ஒருவேளை பெண்ணானவள் தன் சுய உணர்வுகளுக்காக குரல் கொடுத்தால் அவளுக்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் "அடங்காபிடாரி, திமிர் பிடித்தவள்" இன்னும் பல பல.

             வெறும் வார்த்தையில் இல்லை ஐயா பெண் சுதந்திரம். அது வாழ்க்கையில் இருக்க வேண்டும் . ஆனால் வாழ்க்கையில் இது சாத்தியமா ? சாத்தியமே. பெண்ணிற்கும் தன்னைப் போன்றே சுய உணர்வுகள் இருக்கும் என்பதை ஒவ்வோருதரும் உணர வேண்டும்.  உலகம் பல வழிகளில் நவீனமானாலும் பெண்ணை கேலிப்பொருளாய் பார்ப்பதில் இருந்து மாறவில்லை. 

               தன்னை சுற்றி உள்ள பெண் தன்னை விட திறமையானவள் என்றால் அவளை எப்படி எல்லாம் மட்டம் தட்டி சருகாக்க முடியும் என்பதை சிந்திக்கும் ஆண் வர்க்கமே அதிகம். ( எல்லாரையும் சொல்லலங்கோ). என்னதான் சருகாக எண்ணி எங்களை மிதித்தாலும் வாடி வதங்க மாட்டோம் விதைகளாய் முட்டி மோதி விண்ணை நோக்கி வளர்ந்து கொண்டே இருப்போம்.. 

              ஒரு பெண்ணை தாசி, விலை மகள் என்றெல்லாம் கொச்சை படுத்தும் இச்சமூகம் என்றேனும்  அவளை தாசி ஆக்கியது ஆண் இனம் என்பதை ஒத்துக்கொண்டுள்ளதா? பெண்ணிற்கு பிறந்த வீடா ? புகுந்த வீடா? என்றெல்லாம் மேடை போட்டு விவாதிக்கும் இச்சமூகம்  ஆணிற்கு பிறந்த வீடா? புகந்த வீடா? என்று என்றைக்காது சிந்தித்ததுண்டா?.. ( நா தெரியாமதான் கேக்குறேன் கல்யாணத்துக்கு   அப்பறம் பொண்ணுங்களுக்கு பெத்தவங்க தேவை இல்லையா? இல்ல அந்த பெத்தவங்க இல்லாம பொண்ணு வந்துட்டாளா? என்னங்க இது நியாயம் . இதக் கேட்டா என்ன வாயாடினு சொல்றாங்க..என்ன கொடுமங்க  இது??????)

               அட நம் நிலைமைதான் இப்படியோ என்று யோசிக்கும் போது, நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று சிந்திக்க வைத்த விஷயம் இதுதாங்க .. திருவிளையாடல் புராணம் (நம்ம தனுஷ் படம் இல்லைங்கோ ) படத்தில்  சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் பெண்ணென்பவள் திருமணத்திற்கு பின் கணவனுக்கே கட்டுப்பட்டு நடக்கவேண்டியவள் என்று சிவன் சொல்வதாக காட்சி. அடேங்கப்பா இந்த ஆணாதிக்கத்திற்கு கடவுளும் தப்பவில்லைங்கோ....

                  டெல்லியில் நடந்த அந்த ஈவு இரக்கமற்ற நிகழ்வுக்கு பலராலும்     சொல்லப்பட்ட விமர்சனம் "ஒரு பெண்ணிற்கு இரவில் என்ன வேலை". இந்த விமர்சனத்தை     கேட்கும் போது   அத்தனை அருவருப்பாய் இருந்தது. பாதுகாப்பு இல்லாத இந்த சமூகத்தை குறை கூற துணிவில்லை. ஆனால் பெண்ணை இழிவு படுத்த உலகமே முந்திக்கொண்டு வருவது வெட்கமாக உள்ளது.    பெண்ணை நதியாகவும் தெய்வமாகவும்  பூசிக்க வேண்டாம். அவளும் தன்னை போன்ற எலும்பு, சதை,உணர்வு கொண்ட  ஓர் உயிர் என்பதை உணர்ந்தாலே போதும்.... 


                    உலகில் முதலில் தோன்றியது ஆதாம் என்று சொல்லபடுகிறது. ஆனால் எனக்கு ஆச்சர்யம் ஊட்டிய செய்தி இதுதாங்க.. "முதல் "ஆதி மனிதன் ஒரு பெண் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. சுருக்கமாகச் சொன்னால் முதல் மனிதன் ஆதாம்  அல்ல ஏவாள் தான் !.  அதுவும் அவள் ஐரோப்பிய வெள்ளைக்கார ஏவாளும் இல்லை. ஆப்ரிக்கக் கறுப்பு ஏவாளே!முதல் பெண்ணிடம் ஒரு விஷேச ஜீன் இருந்தது என்றும் அதன் பெயர்  மீட்டோ கண்ட்ரியல் டீ .என். ஏ என்றும் விஞ்ஞானிகள்
கண்டு பிடித்துள்ளார்கள்.   அத்தனை மனிதர்களும் உருவாக அடிப்படைக் காரணமான ஆதார சக்தி அந்த ஜீன் தான்க .(நன்றி கி.மு  கி.பி  புத்தகம்).. நல்லா கேட்டுக்கோங்க மக்களே இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே ....(அடப்பாவிகளா!!! வரலாறுலையும் பொண்ண முன்னாடி விடலையா  நீங்க!!!!!)

                            


                   கருவை சுமப்பவளும்  பெண்ணே !
                   கருவாய்  இருப்பவளும் பெண்ணே!
                   அனுமதிப்பதில்லை கருவறையின் உள்ளே அவளை!!!!







                                        எங்கள் அமைதியை நீ பூனை என்று நெருங்கி வந்தால் நாங்கள் சிங்கமாய் மாறி சிதைத்து விடுவோம். ஏனெனில் நாங்கள் வெறும் சிதறி விழுந்த வார்த்தைகள் இல்லை முரண்பாடுகளில் முந்திய ஹைக்கூ  .



உறுதிமொழி:

இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதிகூறுகிறேன்.

மேற்கண்ட படைப்பு வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்றுமுடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.
}

த. ரேவதி 

6 கருத்துகள்:

  1. நல்லது ரேவதி.
    இந்தப் படைப்பின் இணைப்பை விழா மின்னஞ்சலுக்கு அனுப்பி தகவல் தெரிவித்து விடுங்கள். அதுதானே முறை? வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. இணைத்துவிட்டோம். பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரை-
    வகை(3) வரிசை எண்-23 பார்க்க-
    http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
    நன்றி.
    இன்று இரவுக்குள் ஏனைய தலைப்புகளிலும் எழுதலாமே?
    எழுதுங்கள்
    வாழ்த்துகள்.
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்,
    ஒருங்கிணைப்பாளர், விழாக்குழு

    பதிலளிநீக்கு
  3. வேட்டைச் சமூகத்திலிருந்து இனக்குழு சமூகம் வரை இருந்த தாய்வழிச் சமூகம் பிரபுத்துவ சமூகமாக மாறிய போது தொடங்கிய ஆணாதிக்கப் போக்கு அக்னிக் குஞ்சுகளின் தலையெடுப்பில் மீளும் விரைவில். நல்ல அலசல். வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு